கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, February 2, 2026

கனடா டைரி

கனடா டைரி


இந்த வருடம் டிசம்பரில் பனிப்பொழிவு இங்கு குறைவுதான். கிருஸ்துமஸ் சமயத்தில் பனியால் மூடப்படாததால் இங்குள்ளவர்கள் விரும்புவது போல வொயிட் கிருஸ்துமஸ் இல்லை, பச்சை புல்லைப் பார்க்க முடிந்த க்ரீன் கிருஸ்துமஸ். சரி, அவ்வளுவதானா? பனி பொழிவு முடிந்து விட்டதா? என்று  கேட்டதற்கு "வெயிட் அண்ட் சீ, ஜனவரியில்தான் குளிர் அதிகமாக இருக்கும்" என்றாள்.

அதற்கேற்றார்போல் ஜனவரியும் வந்தது, கடுமையான பனிபொழிவும் வந்தது. அதுவும் சென்ற வாரம் மிகக்கடுமையான பனிப்பொழிவு. பனி பொழிந்து கொண்டிருக்கும் பொழுதே ஷவல் செய்வார்கள். எதிர் வீட்டு ஆள் அவர்கள் வீட்டு பனியை வாரிக் கொட்டி விட்டு நிமிர்ந்தால் தெருவில் விழுந்திருக்கும் பனியை சுத்தம் செய்யும் டிரக் வந்து தெருவின் பனியை குவிக்கிறேன் பேர்வழி என்று வீட்டு வாசல்களில் இரைத்து விட, எரிச்சலான எதிர்வீட்டுக்காரர்,"புல் ஷிட்! என்று தன் கையிலிருந்த உழவார படையை விட்டெறிந்தார்:))


24, 25 ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தார்கள். ஞாயிறு அன்று நாங்கள் சாயி பஜனுக்குச் செல்வோம். அதை கூட ரத்து செய்து விட்டு, ஜூமில் வேத பாராயணம் மட்டும் செய்தார்கள். நாள் முழுவதும் பூத்தூவலாய் பனி பொழிந்து கொண்டிருந்தது. ஞாயிறு இரவு குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து திங்கள் கிழமை பள்ளி விடுமுறை என்று மெயில் வந்தது. திங்கள் கிழமை காலையில் எழுந்து வந்தால்... இத்தனை நாட்களாக சூரியனை பார்க்காமல் உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த வானம், சூரியனைக் கண்டதும் கோபத்தை விடுத்து பளிச்சென்று பிரகாசித்தது. ந ஊரில் கனமழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்ற அறிவிப்பு வந்தவுடன் மழை நின்று விடுவதைப் போலத்தான் :)) குழந்தைகள் ஸ்னோ பாண்ட் அணிந்து கொண்டு வீட்டு வாசலில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பனி மலையில் விளையாட போய் விட்டார்கள். செவ்வாய் அன்று மீண்டும் முகம் தூக்கல்.

குளிர்காலம் தொடங்கி முதல் நாள் பனிப் பொழிவை வீடியோ எடுத்து 'first snow' என்று இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தவர்கள், இந்த பனி புயலுக்குப் பிறகு ஷவல் செய்வதை வீடியோ எடுத்து, நாயகனில் வரும், "நாங்க அப்படி இல்ல, பத்து காசு பாக்கணும்னா ரத்த வேர்வை வேர்க்கணும்..' என்ற டயலாக்கையம், 'தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன்..' என்ற மீம்ஸ்களையும் பகிர்ந்தார்கள்.

குளிர் காலம் தொடங்கியதுமே ஆங்காங்கு for snow removal Contat:.... என்று என்ற விளம்பர பலகைகளை பார்த்தேன். அவரவர் வீட்டு வாசலில் விழுந்திருக்கும் பனியை அவரவர்தான் அப்புறப்படுத்த வேண்டும். அதை செய்ய முடியாதவர்களுக்கும், தனியாக வசிக்கும் முதியவர்களுக்கும் உதவும்(காசு வாங்கிக் கொண்டுதான்) நிறுவனங்களின் விளம்பரம் அது என்று தெரிந்தது. 

குளிர் காலத்தில் அதிகம் தென்படும் மற்றொரு விளம்பரம் காது குரும்பையை  (ear wax) சுத்தம் செய்யும் விளம்பரங்கள். குளிர் காலத்தில காதில் அதிகமாக மெழுகு சேர்ந்து, அது உடல் சம நிலையை பாதித்து, தலை சுற்றலை உண்டாக்குமாம். நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் தலை சுற்றல் வந்த பொழுது, என் மகள் இதைக் கூறி, தேங்காய் எண்ணெயை லேசாக சூடு படுத்தி காதில் விட்டாள். சரியாயிற்று. இப்போதும் அதே தலை சுற்றல், அதே பாட்டி வைத்தியம்!.. தலை சுற்றல் போயே போயிந்தி. அதற்குப் பிறகு காதில் பஞ்சு வைத்துக் கொள்கிறேன். 

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் மகள், மருமகன் இருவரும் வெளியே சென்றதால் நான்தான் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வேண்டியிருந்தது. என் மகள்,  " எப்போதும் வெளியே செல்லும் பொழுது அணிந்து கொள்ளும் வின்டர் ஜாக்கெட், குல்லாய், மிட்டன்ஸ் தவிர scarf ஆல் கழுத்தை கவர் பண்ணிக்கொள், மூக்கினையும் மறைத்துக் கொள், மூக்கு வழியாக குளிர் காற்று உள்ளே சென்று விடும்" என்று ஏகப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தாள். "இன்னிக்கு வெயில் இருக்கிறதே" என்றேன். இந்த வெயில் உரைக்காது, வெளியில் டெம்ப்ரேச்சர் -22 C, தவிர காற்று அதிகம்" என்றாள். வெளியே சென்ற பொழுதுதான் அவள் விடுத்த எச்சரிக்கைகளின் காரணம் புரிந்தது.  பனியில் நடக்கும் பொழுது பென்குயின் போல கால்களை கிட்ட கிட்ட வைத்து, உடலை முன் பக்கம் சற்று குனிந்து நடக்க வேண்டும். கீழே விழுந்தாலும் அதிகம் பாதிப்பு இருக்காது. என்பாள். 

அன்றைக்குப் பார்த்து நான் தவறான வகுப்பு வாசலில் நின்று விட்டேன். இங்கு கே.ஜி. வகுப்புகளுக்கு எதிரே குழந்தைகள் விளையாடதிறந்த வெளி இருக்கும். அதைத் தாண்டி வேலி இருக்கும். அந்த வெளியைத் தாண்டி நாம் நின்று கொள்ள வேண்டும். தங்கள் வகுப்பு கண்ணாடி கதவுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மை அடையாளம் காட்டிய பிறகுதான் ஆசிரியை குழந்தைகளை வெளியே அனுப்புவார்.

சாதாரணமாக சீக்கிரம் வந்துவிடும் குழந்தை இன்று வரவேயில்லையே என்று நான் பார்க்கிறேன். குழந்தைகளை வெளியே அனுப்பும் ஆசிரியை என்னிடம், " யாருக்காக காத்தருக்கிறாய்?" என்றதும் நான் என் பேத்தியின் பெயரை சொன்னேன். குழந்தை வெளியே வரவில்லை. தவறான வகுப்பு வாசலில் நின்றால்  எப்படி வரும்? குளிரில் என் கைகள் விறைக்கத் தொடங்கி விட்டன.மற்றொரு ஆசிரியை வந்து என்னிடம் குழந்தையின் பெயர், வகுப்பு, வகுப்பு ஆசிரியை பெயர் இவைகளை கேட்டுக் கொண்டார், அதற்குள் என் பெரிய பேத்திக்கும் வகுப்பு முடிந்து விட, அவள் வந்து, என்னை சின்ன பேத்தி படிக்கும் வகுப்பிற்கு அழைத்துச் சென்றாள். வீட்டிற்கு வந்ததும் அடுப்பை மூட்டி, குளிர் காய்ந்து கொண்டேன். சிலர் குழாயில் வென்னீரை திறந்து விட்டு அதில் கைகளை நீட்டுவார்களாம், ஆனால் அப்படி செய்யக் கூடாதாம். 

இரண்டு நாட்கள் முன்பு எக்கச்சக்க குளிரில் எனக்கு அழுகையே வந்து விட்டது. " சென்ற முறையும் விண்டரில்தான் இங்கு வந்தாய், அப்போது இப்படிப்பட்ட புகார்கள் இல்லையே? இந்த முறை என்னவாயிற்று உனக்கு?? என்றாள் மகள். எனக்கு மூன்று வயது கூடி விட்டதே?' என்றேன். ஒரு வேளை உன் உடம்பில்  B12, கால்ஷியம் போன்றவை குறைவாக இருக்கலாம், சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்" என்றாள். அதையும் பார்த்து விடலாம். பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆக வேண்டும். பனி தேசத்திற்கு வந்து விட்டால் குளிரை அனுபவிக்க வேண்டும். 


 

  

  



 

Monday, January 26, 2026

ஆபீஸ் பையனின் அந்தரங்க ரிப்போர்ட்(புத்தக விமர்சனம்)

ஆபீஸ் பையனின் அந்தரங்க ரிப்போர்ட்
(புத்தக விமர்சனம்)


குமுதத்தில் உதவி ஆசிரியர்களுள் ஒருவராக இருந்த, பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பிரபலமான ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் சாவியில் 1998ல் எழுதிய கட்டுரைத் தொடர் ஆபீஸ் பையனின் அந்தரங்க ரிப்போர்ட். 

ஒரு பத்திரிகை காரியாலயத்தில் நடக்கும் நிகழ்வுகளை சுவையாகவும், தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும் எழுதியிருக்கிறார் பாக்கியம் ராமசாமி அவர்கள். நகைச்சுவைக்கு உதாரணமாக கீழ்கண்ட இரண்டு விஷயங்கள்:

'காரை ராத்திரி அண்ணா நகர்லே கொண்டு போய் விடறதுக்கு டிரைவர் புறப்படறேன்னார். மாம்பலத்திலே இறங்கிக்கிற உதவி ஆசிரியரும் சேத்துபட்டுலே இறங்கிக்கிற உதவி ஆசிரியரும் காரில் ஏறிகிட்டாங்க. நானும் ஒட்டிகிட்டேன். எனக்கு அண்ணா நகர்லேதான் வீடு. மாம்பலத்துலே ஒருத்தரை இறக்கி விட்டுட்டு, வள்ளுவர் கோட்டத்துப் பக்கத்திலே வண்டி வர்ர போது டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு, எதுவும் சொல்லாமல் இறங்கி எங்கேயோ போய் விட்டார்.
"ஏண்டா, வண்டியிலே எதுனா டிரபிளா?" என்று பின் ஸீட்டிலிருந்த உதவி ஆசிரியர் கேட்டார். "டிரைவர் எங்கேடா போயிருக்கிறார்?"

"இன்ட்டர்வெல்லுக்குப் போயிருக்கார்" அப்படீன்னேன். அவருக்குப் புரியலை.பள்ளிக்கூடத்துலேயெல்லாம் அப்படித்தான் நாங்க சொல்லுவோம்.

உதவி ஆசிரியர் பள்ளிக்கூடமே போனதில்லை போலிருக்கு. 'இன்டர்வெல்லுக்குப் போயிருக்கார்'னா என்னன்னே அவருக்குத் தெரியலை.

'நம்பர் ஒன் பாத்ரூமுக்குப் போயிருக்கார்னு வெலாவரியாச் சொல்லணும் போலிருக்கு!’ அய்யோ. அய்யோ.//

ஆசிரியர் ப்ளூ கலரிலே ஒரு மாஜிக் டைரி வெச்சிகிட்டிருக்காரு. அதுலேதான் எல்லோருடைய டெலிபோன் நம்பர், விலாசம், விசிட்டிங் கார்டுங்க எல்லாம் இருக்கும். ஜப்பானிலே, அமெரிக்காவிலே ஆசிரியருக்கு நெறையப் பேரு பிரண்ட்ஸ். விலாசமெல்லாம் அந்த ப்ளூ டைரியிலே இருக்கும். அதிலே என்ன மாஜிக் என்கிறீங்களா?

ஆசிரியர் எந்த ஒரு விலாசத்தைத் தேடறாரோ அது மட்டும் அந்த டைரியில் அகப்படாது. "எங்கயானும் விழுந்திருக்குதா பாருடா," என்பார்.

உதவி ஆசிரியர்களும், லே அவுட் ஆர்டிஸ்டுகளும் புகைப்படங்களை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது வாடிக்கையாம். 

அலுவலகத்திற்கு வந்த வி.ஐ.பி.க்களில் சுப்புடுவை சிவப்பு தாத்தா சார் எங்கிறார். . அவர் பேசுவதைக் கேட்டு உதவி ஆசிரியர்களுக்கு ஒரே சிரிப்பாம்.

கிரைம் கதைகள் எழுதும் ராஜேஷ் குமார், அலுவலகத்திற்கு வந்ததும் ஆசிரியர் காலை தொட்டு வணங்குவராம்.

கவிஞர் வைரமுத்துவும் அவர் மனைவியும் வந்த பொழுது கவிஞர் ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தினாராம், அவர் மனைவி ஆசிரியரின் மனைவிக்கு பொன்னாடை போர்த்தினாராம். இது போல போர்த்த பொன்னாடைகளை தயாராக வைத்திருப்பாராம் ஆசிரியர். அது பரவாயில்லை ஒரு உதவி ஆசிரியர் அலுவலகத்திலிருந்து நேராகா ஏதாவது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு தோதாக சலவை செய்த வேட்டிகள், சட்டைகள் இவற்றை தன்னுடைய அலுவலக பீரோவின் மேல் தட்டில் அடுக்கி வைத்திருப்பாராம். அதைப் பற்றி ஆபீஸ் பையனின் கமெண்ட் "அவங்க வீட்டு பீரோல இடம் இல்லை போலிருக்கிறது, இங்க அடுக்கி வெச்சுட்டாரு"

ஓரு முறை ஒரு உதவி ஆசிரியரை ஏதோ நிகழ்ச்சிக்கு போகச்  சொல்லி யிருக்கிறார் ஆசிரியர். அவர்,"நான் ஷேவ் செய்து கொள்ளவில்லை என்று மூன்று நாள் முள்ளு தாடியை சொரிந்திருக்கிறார், உடனே ஆசிரியரின் வீட்டிலிருந்த(அலுவலகத்திற்கு மாடியில்தான் வீடு) புத்தம் புதிதாக ஷேவிங் செட், சோப்பு, பவுடர் எல்லாம் வந்து விட்டதாம்.

கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதும் புத்தகம் வெளியானதும் படித்து விட்டு கருத்து கூறி விடுவாராம்.  ஒரு முரை 1996 என்று அச்சிடப்படுவதற்கு பதிலாக 1966 என்று அச்சாகி விட்டதாம், அதை உடனே போன் செய்து சுட்டிக் காட்டினாராம்.   

ஓவியர் கோபுலு ஒரு முறை ஆசிரியரைப் பார்க்க வந்த பொழுது கோபுலு, ஆசிரியர் இருவருமே கோடு போட்ட  சட்டை அணிந்திருந்தார்களாம். கோபுலு அவர்கள் அதை சுட்டிக்காட்டி "நீங்களும் கோடு, நானும் கோடு" என்றதும், ஆசிரியர் சாவி, "உங்கள் கோடு பேசும் கோடு" என்றாராம். 

கோபுலு அவர்கள் வரைந்திருந்த தர்பூஸ் பழங்களின் படத்தை பார்த்து விட்டு, சாவி அவ்வளவு சிலாகித்தாராம். சாவி அவர்களின் ஈடுபாடு, கோபம் போன்றவைகளை நல்ல விதமாக புரிந்து கொள்கிறோம்.

ஓவியர் ஜெயராஜ் படம் வரைந்து ஃபாக்சில்(fax) அனுப்பி விடுவாராம். இதைத் தவிர, ஒரு பத்திரிகையின் ஒரு பதிப்பை வெளிக்கொண்டு வர உதவி ஆசிரியர்கள், ப்ரூஃப் ரீடர்கள் போன்றவர்களின் பங்களிப்பு எவ்வளவு என்பது இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது புரிகிறது.  

என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம், சாவி அவர்களோடு பெங்களூர் மாவேலி டிஃபன் ரூமில்(MTR) சாப்பிட சென்றபொழுது வி.வி.ஐ.பி. க்களுக்கான தனி ரூமில் சாப்பிட்ட லஞ்சை விவரித்திருக்கும் விதம்தான். எல்லோருக்கும் வெள்ளித் தட்டில் சாப்பாடு, ஒண்ணேகால் கிலோ எடையுள்ள தங்க கோப்பையில் காபியாம்.(பார்ரா!) வி.வி.ஐ.பி.க்களுக்காக ஒரு டஜன் தங்ககோப்பைகள் அவர்கள் வைத்திருந்தார்களாம். பேஷ்! பேஷ்!

இப்படி பல சுவையான சம்பவங்களை சுவாரஸ்யமாகவும், சுருக்கமாகவும் பகிர்ந்த்திருக்கிறார். 

www.pustaka.co.in.ல் படிக்கலாம்.

Wednesday, December 31, 2025

 பாரதி பாஸ்கர் செய்வது சரியா?

பாரதி பாஸ்கர் நல்ல பேச்சாளர் என்பதில் சந்தேகம் கிடையாது. பட்டிமன்றத்தில் மட்டுமல்லாது கம்பன் கழங்கங்களிலும் ஆழமாக உரையாற்றக் கூடியவர். சமீபமாக யூ டியூபில் கதைகளை சொல்கிறார். கவனியுங்கள், சொல்கிறார், படிப்பதில்லை. அவருடைய மேடை அனுபவங்கள் கதைகளை திறம்பட சொல்ல உதவுகின்றன. குரலில் நல்ல மாடுலேஷனோடு அழகாக சொல்கிறார். 

அவர் கதை சொல்வதில் ஒரு விஷயம் சற்று நெருடலாக இருக்கிறது. ஒரு கதையை அந்த கதாசிரியர் எந்த காலத்தில் எழுதினாரோ அப்பொழுதிருந்த சூழலைத்தான் அவர் தன் கதையில் குறிப்பிட்டிருப்பார். இவரானால் அந்த குறிப்பிட்ட சூழலை தற்காலத்திற்கேற்றார்போல மாற்றி விடுகிறார். 

சுஜாதாவின் மத்யமர் கதைத் தொகுப்பில் தாய் -2 என்று ஒரு கதை உண்டு. அதில் வயதான விதவைத் தாயை பராமரிக்கும் பொறுப்பை அண்ணன்,தம்பி இருவரும் தட்டிக் கழிக்கப் பார்ப்பார்கள். டில்லியில் உயர் பதவியில் இருக்கும் அண்ணன் அம்மாவை அழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தனக்கு வெளிநாட்டு டெபுடேஷன் என்பான். தம்பியின் மனைவியோ நாம்தான் இளித்த வாயர்களா? என்பாள். இந்த சமயத்தில் ஊரிலிருந்து வரும் மாமா இவர்களின் அம்மாவுக்கு பிதுர்ராஜிதமாக கிடைக்க வேண்டிய சொத்திலிருந்து எட்டு லட்சம் கிடைக்கும், அந்த பணத்தில் திருச்சியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, மிச்ச பணத்தை வங்கியில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் ஒரு ஆளை துணைக்கு வைத்துக் கொண்டு தனியாகவே இருக்கலாம் என்றுகூறுவார். உடனே தம்பிக்காரன், ராத்த்ரி ஒன்பது மணிக்கு மவுண்ட் ரோடு தபாலாபீசுக்குச் சென்று அண்ணனுக்கு," என்று தந்தி கொடுStarting by grand trunk express tomorrow to take mother Divakar த்துவிட்டு திரும்புவான். வந்தால் வீட்டில் அவனுக்கு அண்ணனிடமிருந்து, Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar என்று தந்தி வந்திருக்கும். 

இந்தக் கதையை கூறிய பாரதி பாஸ்கர் தந்தி என்று கூறாமல் SMS வருவதாக கூறுகிறார். சுஜாதா இந்தக் கதையை எழுதிய காலத்தில் எஸ்.எம்.எஸ். என்னும் ஒரு விஷயமே கிடையாது. அப்போது இருந்த தந்தி இப்போது இல்லை, ஆனால் இந்தக் கதையை படிக்கும் அல்லது கேட்கும் இளைய தலைமுறைக்கு தந்தி என்று ஒரு விஷயம் அப்போது இருந்தது. ராத்திரி எந்த நேரத்திலும் தந்தி கொடுக்க முடியும் போன்ற விவரங்கள் தெரிந்து கொள்ள முடியுமே. 

அதைப் போல ஆர்.சூடாமணியின் 'அந்நியர்கள்' என்னும் கதையில் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் தங்கை சௌமியாவை தன்னுடைய லேடீஸ் கிளபிற்கு அழைத்துச் செல்லும் அக்கா சவிதா அங்கு ஒரு உடல் ஊனமுற்ற ஒரு ஏழை மாணவனுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்பட்டபொழுது அக்கா பத்து ரூபாய் கொடுப்பாள், தங்கை சற்று யோசித்துவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தாள் என்றுதான் சூடாமணி எழுதியிருப்பார். பாரதி பாஸ்கருக்கு பத்து ரூபாய், ஐந்து ரூபாயெல்லாம் ரொம்ப குறைவு என்று தோன்றியதோ என்னவோ, அதை ஐநூறு ரூபாயாக உயர்த்தி விட்டார். இப்போது வேண்டுமானால் பத்து ரூபாய்க்கு மதிப்பு இல்லாமல் இருக்கலாம். சூடாமணி அந்தக் கதை எழுதிய காலத்தில் பத்து ரூபாய்க்கு மதிப்பு இருந்திருக்கிறது என்பதை அந்தக் கதையை படிக்கும் இளைய தலைமுறை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பை பாரதி பாஸ்கர் தடுத்து விடுகிறார். 

அந்தக் கதையில் ஈராஸ் தியேட்டரில் ஓடும் எல்லாப் படங்களுக்கும் சவிதா தன் தங்கையை அழைத்துச் சென்றதாக சூடாமணி எழுதியிருப்பார். இப்போது ஈராஸ் தியேட்டரே இல்லை, அதற்காக இ.ஏ.மாலிலோ அல்லது ஃபீனிக்ஸ் மாலிலோ படம் பார்த்தார்கள் என்று சொல்லிவிட முடியுமா? அப்போது அடையாரில் ஈராஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது என்னும் தகவல் நமக்கு கிடைக்கிறது, அதை காலத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறேன் என்று கதை சொல்கிறவர்கள் மாற்றினால் என்னவாகும்?இன்றைக்கு இவர் ஒன்றை மாற்றுவார், நாளைக்கு வேறு ஒருவர் வேறு ஒன்றை மாற்றுவார், கடைசியில் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டை கெடுத்தான் என்பது போல கதை சொல்லிகள் கதையை கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே!

ஸாஹித்ய் கர்த்தாக்களின் கிருதிகளை(பாடல்களை) மாற்ற மற்றவர்களுக்கு எப்படி அதிகாரம் கிடையாதோ, அதைப்போல எழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியேதான் சொல்ல வேண்டும், அதை மாற்ற மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றுதான் நான் கருதுகிறேன்.   

Saturday, December 27, 2025

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா...

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா...



என் கல்லூரி நாட்களில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகள் கமலும்,ரஜினியும். நிறைய இளம் பெண்களுக்கு கமலஹாசனை பிடிக்கும், எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் நானும் அவரைப் போலவே வேகமாக பேசுவேன். அப்படி வேகமாக பேசியதால் நிறைய கிண்டல், கேலி, அவமானங்களுக்கு உள்ளாகி எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையே இருந்தது. வேகமாக பேசுமொரு ஆள் வெற்றிகரமான நட்சத்திரமானது அந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி நம்பிக்கை அளித்தது. அதுவே அவரை ரசிக்க முக்கிய காரணம். 

அண்ணாமலை படம் வெளியானபொழுது என் மகனுக்கு ஐந்து வயது. அந்தப் படம் அவனுக்கு அவ்வளவு பிடித்தது. நாங்கள் அப்போது மஸ்கட்டில் இருந்தோம். ஒரு தோழியின் வீட்டிற்கு முதல் முறையாகச் செல்கிறோம், தோழியின் கணவர் என் மகனிடம், "உன் பேர் என்ன?" என்று கேட்டதும், என் மகன், "என் பேரா? அண்ணாமலைனு வெச்சுக்கலாமே" என்றானே பார்க்கணும். தோழியின் கணவர் இன்றுவரை என் மகனை அண்ணாமலை என்றுதான் அழைப்பார்.

ஐந்து வயதாகும் என் பேத்தி சில சமயம் என்னுடன் படுத்துக் கொள்வாள். இரட்டைக் கட்டிலின் சுவரோரம் அவளை படுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு அவளுக்கு போர்த்தி விட்டேன். நான் இந்தப் பக்கம் இருந்ததால் இரண்டு கைகளாலும் போர்வையை பிடித்துக் கொண்டு, வலை வீசுவது போல் வீசினேன், போர்வை கச்சிதமாக அவள் மீது வீழ்ந்தது. மறுநாள் படுத்துக் கொண்ட என் பேத்தி, "கேன் யூ போர்திங் மீ லைக் ரஜினிகாந்த்?' என்றாள். எனக்கு ஒண்றும் புரியாமல் விழித்து,"வாட்?"என்றேன். 

"லைக் யெஸ்டெர் டே"

அப்போதும் புரியாமல் நான் விழிக்க, என் மகள், "நீ அவ்ளோ ஸ்டைலா போர்த்தி விடறயாம்.." என்று விளக்கினாள். தோடா! என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு தினசரி அவளுக்கு அது வழக்கமாக போய் விட்டது. தூங்கச் செல் என்றால், "ஐ ஆம் வெய்டிங் ஃபார்ரஜினிகாந்த்" என்பாள். "அவர் சென்னையில் இருக்கிறாரோ, இமயமலையில் இருக்கிறாரோ?" என்பேன்.

இரண்டு நாட்கள் முன்பு அவளுக்கு போர்த்தி விடச் செல்ல நேரமாகி விட்டது, மாடிப்படியில் அமர்ந்த வண்ணம் உறங்கத் தொடங்கி விட்டாள். ஒரே வீச்சில் போர்வையை போர்த்த வராவிட்டால், "டு டே ரஜினிகாந்த் டின்ட் கம் ப்ராப்பர்லி" என்பாள். 

சித்திரம் மட்டுமா கைப்பழக்கம்? போர்வையை ஸ்டைலாக போர்த்தி விடுவதும்தான். இப்பொழுது நல்ல தேர்ச்சி அடைந்து விட்டேன். அதனாலோ என்னவோ,  முந்தாநாள் "யூ ஆர் த பெஸ்ட் லேடி ரஜினிகாந்த்" என்றாள். ஆ! நயன்தாராவுக்கு போட்டியா?? 

இதில் என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால், பொதுவாக ஒரு தலைமுறையினர் ரசிக்கும் நடிக, நடிகையர்களை அடுத்த தலைமுறையினரே ரசிக்க மாட்டார்கள். ஆனால், எனக்கும் ரஜினிகாந்தைப் பிடிக்கும், என் குழந்தைகளுக்கும் ரஜினிகாந்தை பிடிக்கும் இப்போது என் பேத்திக்கும் ரஜினிகாந்தை பிடித்திருக்கிறது. ஃபினாமினல்! தலைவா யூ ஆர் கிரேட்! Happy birthday!  

 Dec.12th நான் முகநூலில் எழுதியது.

Thursday, December 25, 2025

டொமினிக் & த லேடீஸ் பர்ஸ்(மலையாளம்) & காந்தா

 டொமினிக் & த லேடீஸ் பர்ஸ்(மலையாளம்)

காவல் துறையில் பணியாற்றிய டொமினிக்(மம்முட்டி) அங்கு அவர் நடந்து கொண்ட முறையால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். மனைவியும் அவரை விவாகரத்து செய்து விடுகிறார். அவர் தனியாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்துகிறார். அதில் பெரிய வருமானம் இல்லை, வீட்டு வாடகை கொடுப்பதற்கே திணறும் நிலை. அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரான பெண்மணி இவரிடம் கருணையோடு நடந்து கொள்கிறார். ஒரு நாள் மருத்துவமனையில் அவருக்கு கிடைத்த ஒரு பெண்ணின் பர்ஸுக்கு தொந்தக்காரியை கண்டுபிடிக்கச் சொல்கிறார் அவர்.
அந்த பர்ஸுக்கு சொந்தக்காரி பூஜா ரவீந்திரன் என்னும் ஒரு பெண் என்பது தெரிகிறது. அதை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்கச் சென்றால் அவரோடு சேர்ந்து வசிக்கும் பெண், நான்கு நாட்களாக பூஜா மிஸ்சிங் என்கிறார். அதை விசாரிக்கத் தொடங்கினால் அந்தப் பூஜாவின் காதலன் கார்த்திக்கை இரண்டு வருடங்களாக தான் பார்க்கவில்லை என்கிறாள் கார்த்திக்கின் சகோதரி. இப்படி அடுத்தடுத்து திருப்பங்கள். அவைகளை டொமினிக் எப்படி சால்வ் செய்கிறார் என்பதுதான் கதை.
நெய்ல் பைட்டிங் கதையை எந்தவித பரபரப்புமில்லாமல் நிதானமாக, ஆனால் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் சிறப்பு!.
டொமினிக்காக மம்முட்டி, அவரது அசிஸ்டெண்டாக கோகுல் சுரேஷ். இதைத் தவிர வினீத் போன்ற நமக்கு பரிச்சயமான பல முகங்கள். எல்லோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கௌதம் மேனன் படங்களில் பாடல்கள் நன்றாக இருக்குமே? நகைச்சுவை அறவே இல்லை, ரத்தம் பீரிடும் வன்முறை இல்லை. வெப் சீரீஸ் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை, ஆனாலும் குடும்பத்தோடு ரசிக்கலாம்.

காந்தா

துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ, காயத்ரி, இவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, நிழல்கள் ரவி, வையாபுரி, ஆடுகளன் நரேன் போன்றவர்களும் இருக்கிறார்கள். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.

டி.கே.மகாதேவன் என்னும் சூப்பர் ஸ்டாராக துல்கர், அவரை உருவாக்கிய இயக்குனர் சமுத்திரகனி.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் பாதியில் நின்று போன படத்தை மீண்டும் துவக்குகிறார்கள். அவர்கள் இருவரும் படப்பிடிப்பில்மோதிக் கொள்கிறார்கள். தன் விருப்பப்படிதான் கிளைமாக்ஸ் எடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவருமே வீம்பாக நிற்கிறார்கள். துல்கர் மீது காதல் வசப்படும் கதாநாயகி பாக்யஸ்ரீ கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? ராணா துப்பு துலக்குவதுதான் இரண்டாம் பாதி. 

MKT ஐ நினைவு படுத்துவது போல துல்கருக்கு TKM என்று பெயர். சிலர் கூறுவது போல எம்.கே.தியாகராஜ பாகவதரை நினைவு படுத்துவது போல எந்த காட்சியும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய நடை, உடை, பாவனைகள் எம்.ஜி.ஆரைத்தான் நினைவு படுத்துகின்றன. அவரும், சமுத்திரகனியும் நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் சளைக்கவில்லை. ஏன் அந்த புதுமுக கதாநாயகி உள்பட யாரும் சோடை போகவில்லை. ராணாதான் கொஞ்சம் கோமாளித்தனமாக செய்திருக்கிறார். செட், உடைகள் எல்லாம் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றன. 

பாடல்கள் கோலோச்சிய அந்தக் கால மெட்டில் பாடல் போட்டு அசத்தியிருக்க வேண்டாமா? கோட்டை விட்ட இன்னொரு விஷயம் ஒரு காட்சியில், "அவர் காலடியில் படுத்துக் கொண்டிருந்தால் தடவிக் கொடுப்பார், பறக்க ஆரம்பித்தால் இறக்கையை வெட்டுவார்" என்று துல்கர் கூறுவாரே தவிர துல்கருக்கும், சமுத்திரகனிக்கும் எதனால் ஆகாமல் போனது என்பது அழுத்தமாக காட்டப்படவில்லை. கொலையாளி யார் என்று யூகிக்க முடிந்தாலும் முடிவு எதிர்பாராதது.  

நெட்ஃப்லெக்ஸில் பார்கலாம்


Thursday, December 18, 2025

ஹிந்து ஹெரிடேஜ் சென்டர் - கனடா

கனடாவில் மிஸிஸாகா என்னும் இடத்தில் ஹிந்து ஹெரிடேஜ் சென்டர் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்குதான் பஜனை, ராதா கல்யாணம், சிறப்பு பூஜைகள் போன்ற ஹிந்துமத நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் கீழ் தளத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்த கிச்சனோடு கூடிய ஹாலும், முதல் தளத்தில் கோவிலும் இருக்கிறது.

என்னோடு வாருங்கள், கோவிலை தரிசனம் செய்யலாம்.

ஹிந்து ஹெரிடேஜ் சென்டரின் வாயிலில் 51 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பீடத்தின் உயரம் ஏழு அடி.





நடுவில் இருக்கும் பெரிய ஸ்படிக லிங்கத்தைப் பார்த்த ஒரு குழந்தை, "திஸ் இஸ் பிக் எக்" என்றது. ஒரு வகையில் உண்மைதானே?

பொதுவாக என்னை வட இந்திய பாணி கோவில்களும், மார்பிள் மூர்த்தங்களும் அவ்வளவாக கவராது. ஆனால் இந்த மூர்த்தங்களில் இருக்கும் முக லாவண்யமும்
கருணையும் வசீகரித்தது. 



நவ கிரகங்கள்

ரசித்தீர்களா இல்லையா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? கருத்திடுங்கள். நன்றி.



Monday, December 8, 2025

கச்சேரி மாற்றங்கள்

கச்சேரி மாற்றங்கள்

இந்த உலகில் மாறுதல்தான் மாற்றம் இல்லாதது என்பார்கள். எத்தனையோ மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம், குறிப்பாக ஒரு முப்பது வருடங்களாக நடக்கும் மாற்றங்கள் அளவில் மிகப் பெரியதாக இருக்கின்றன. 

இப்பொழுது கர்நாடக இசையை எடுத்துக் கொள்வோமே, முன்பெல்லாம் கர்நாடக இசை பாடுகிறவர்கள் சினிமா பாடல்களை பாடவே மாட்டார்கள். 

சினிமா பாடல்கள் பாடுவது என்பது ஏதோ ஒரு தவறான பாடல்கள் பாடுவதைக் போன்ற தவறான செயல் என்பது போல கருதப்பட்டது. ஏன் எங்கள் வீட்டிலேயே கூட சினிமா பாடல் கேட்பதற்கும் சினிமா பாடல் பாடுவதற்கும் தடை உண்டு. ரேடியோவில் சினிமா பாடல்களை சத்தமாக வைத்து கேட்டு விட முடியாது. நாங்கள் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டு பெரியவர்கள் வந்தால், "என்ன டீக்கடை மாதிரி சினிமா பாட்டு? நிறுத்து" என்று அதை நிறுத்தி விடுவார்கள்.   

என் மூத்த சகோதரி முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவர். அவரும் சரி,அவருடைய தோழிகளும் சரி சினிமா பாடல்களை பாடி நான் கேட்டதே கிடையாது. அவர்கள் சினிமா பாடல்கள் பாடவே மாட்டார்கள் அது ஏன் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை அவர்களுக்கு அந்த பாட்டு பாட வரவில்லையா? அல்லது பாடக்கூடாது என்று அவர்களுடைய ஆசிரியர்கள் கண்டித்தார்களா என்று தெரியாது. 

ஆனால் இப்பொழுது பாருங்கள் ரஞ்சனி காயத்ரி என்னும் பிரபல பாடகிகள் பக்காவாக ஒரு கர்நாடக இசை கச்சேரி செய்வது போலவே இளையராஜாவின் சினிமா பாடல்களையே கச்சேரியாக செய்திருக்கிறார்கள். கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கிறது.

ராக ஆலாபனை, ஸ்வரமெல்லாம் பாடி ஒரு மெட்லியாக பாடல்களை அவர்கள் தொகுத்துக் கொடுத்து இருக்கும் விதம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. அதையும் கர்நாடக இசை கச்சேரிக்கு உடை அணிவது போன்ற அதே முறையில் நல்ல பட்டுப் புடவை கட்டிக்கொண்டு தலையில் பூ வைத்துக் கொண்டு, அதே போல மேடை அமைப்பு வயலின், மிருதங்கம், போன்ற பக்கவாதிகளோடு அவர்கள் அந்த சினிமா பாடல்களை பாடியது மிகவும் ரசிக்கும் படியாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. 

'ரங்கபுரவிகாரா.. ' என்னும் பாடலை ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் தன்னுடைய அகம் என்னும் Bandல் ஃபியூஷனாக பேண்ட்,சர்ட் அணிந்து கொண்டு பாடி இருந்ததையும் ரசித்தோம். 

இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து கொண்டு கர்நாடக இசையை பாடுகிறார்கள் நாம் அந்த பாடலை மட்டும் ரசிக்கிறோம் அவர்கள் உடையை ரசிக்காமல் பாடலை ரசிக்க கற்றுக் கொண்டு விட்டோம். 

சிந்து பைரவி படத்தில் சிவக்குமார் மீசை வைத்துக் கொண்டு நடித்ததை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுது பாருங்கள் கர்நாடக இசை பாடும் இளைஞர்கள் நவீனமாக உடை அணிந்து கொண்டு மெல்லிசை பாடகரைப் போல உடை அணிந்து கொண்டு கர்நாடக இசை பாடுகிறார்கள் இதையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்களாகவே நான் கருதுகிறேன். அதற்காக வீம்புக்கு லுங்கி கட்டிக் கொண்டு கச்சேரி செய்ததை ஏற்க முடியவில்லை.